14 வயது சிறுமி மதுபானம் அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த விவகாரம் – பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டனரா என ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவு!

Monday, August 21st, 2023

14 வயதுடைய சிறுமி ஒருவர் மதுபானத்தை அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில், ஏதேனும் ஒருவர் அவரை மதுபானத்துக்கு அடிமையாக்கி விட்டாரா? அல்லது, அவருக்கு மதுபானத்தை பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டுள்ளாரா என ஆராய்ந்து அறிக்கையிடுமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு இருப்பின், அது தொடர்பான சந்தேகநபரை கைது செய்யுமாறும் கெக்கிறாவ நீதவான் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன், குறித்த சிறுமி தொடர்பில், விசேட சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் பணித்துள்ளார்.

முன்பதாக கெக்கிறாவ கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 14 வயது சிறுமி ஒருவர் அண்மையில் மதுபானம் அருந்தி விட்டு பாடசாலைக்கு சமுகமளித்திருந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையால் நீதிமன்றுக்கு அறியப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், அவர் பயிலும் பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்கள், மதுபானம் அருந்தி விட்டு குறித்த சிறுமி பாடசாலைக்கு சமுகமளித்துள்ளதை கண்டறிந்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், குறித்த சிறுமியின் தாத்தாவினால் அவர் மதுபானம் அருந்துவதற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: