கியூ.ஆர். முறைமை விரைவான முடிவுகளை எடுப்பதற்கும் சந்தை சூழ்நிலைகளைப் பகுப்பாய்வு செய்யவும் சிறந்த தளமாக இருந்தது – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டு!

Sunday, September 3rd, 2023

எரிபொருளுக்கான கியூ.ஆர். முறைமை, கொள்கை மற்றும் விரைவான முடிவுகளை எடுப்பதற்கும் சந்தை சூழ்நிலைகளைப் பகுப்பாய்வு செய்யவும் ஒரு சிறந்த தளமாக இருந்ததாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தமது டுவிட்டர் பக்கத்தில் அவரை இதனைப் பதிவிட்டுள்ளார்.

அது மிகக் குறுகிய காலத்தில் சமூக, பொருளாதாரத் துறைகளில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 6.5 மில்லியன் வாகனங்கள் கியூ.ஆர். எரிபொருள் முறைக்காக பதிவு செய்துள்ளன. அத்துடன் கடந்த முதலாம் திகதி வரையில் 350 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனை செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தேசிய எரிபொருள் அனுமதி அட்டை ‘க்யூஆர்’ அமைப்பு எதிர்காலத்தில் மேம்பட்ட நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு, தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் QR முறையை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் அப்போது நிலவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக இருக்கும் வளங்களை முகாமைத்துவம் செய்து விநியோக திட்டமாக அமுல்படுத்துவதே என அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டுகிறார்.

அப்போது நிலவி வந்த சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளை சமாளித்து நெருக்கடிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் வாழ்க்கை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

கியூஆர் அமைப்பில் 65 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மற்றும் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 3,500 லட்சத்துக்கும் அதிகமான எரிபொருள் விநியோக பரிவர்த்தனைகள் அந்த அமைப்பு மூலம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவுகள், அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் எரிபொருளுக்கு புதிய விநியோகஸ்தர்களை சேர்த்ததன் மூலம் எரிபொருள் இறக்குமதிக்கான நிதித் தேவைகள் நிர்வகிக்கப்பட்டதால், QR குறியீடு இனி தேவைப்படாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: