யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 3 ஆவது தடுப்பூசி செலுத்துகை இன்றுமுதல் முன்னெடுப்பு!

Monday, December 13th, 2021

யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம், இன்று காலைமுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதில்  30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும் ஆபத்துள்ள மக்கள் தொகுதியினருக்கும் மேலதிகமாக மூன்றாவது தடவையாக வட.மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் வழங்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று ஆகக்குறைந்தது மூன்றுமாத இடைவெளியின் பின்னர் இந்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இரண்டு தடவைகள்  கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களில் கொரோனா தொற்றிற்கு உள்ளானவர்கள், அவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 06 மாதகால இடைவெளியின் பின்னர் குறித்த தடுப்பூசியினைபெற்றுக்கொள்ளலாம்.

எனவே, மேற்குறிப்பிட்டவர்களில் சினோபாம் அல்லது ஏதாவது ஒரு  கொரோனா தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே தமது தடுப்பூசி அட்டையினை சமர்ப்பித்து, தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு, மார்கழி மாதம் 18 ஆம் திகதிமுதல் பிரதி சனிக்கிழமைகளில் தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இந்த தடுப்பூசிகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள், தடுப்பூசி வழங்கும் நிலையத்திலுள்ள வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு, மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: