கடவுச்சீட்டு விநியோகத்தில் தமிழ் பெண்களுக்கு புதிய நடைமுறை!

Monday, December 9th, 2019


புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தமிழ் பெண்கள் நெற்றிப்பொட்டுடன் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது சர்வதேச நியமங்களின் அடிப்படையில் இலங்கை கடவுச்சீட்டு தரப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் பி.ஜி.ஜி.மிலிந்த தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் சர்வதேச நியமங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருத்தல் அவசியம். ICAO எனப்படும் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பானது புதிய கடவுச்சீட்டுக்கான படம் எப்படி இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை எல்லா நாடுகளுக்கும் வழங்கியுள்ளது. அதன்படி கடவுச்சீட்டிலுள்ள புகைப்படத்தில் முகத்தில் எந்தவிதமான செயற்கை அடையாளங்களும் இருக்க முடியாது. ஆகையால் நாம் நெற்றியில் பொட்டு வைப்பதை தவிர்க்கச் சொல்கிறோம்.

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் தமிழ் பெண்களே அதிகம் பாதிப்படைகின்றனர். அதாவது பொட்டு உள்ள படத்தை கடவுச்சீட்டில் கொண்டிருக்கும் பெண்கள் சில சந்தர்ப்பங்களில் பொட்டு வைக்காமல் வெளிநாடுகளுக்கு செல்லும் போது நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.

இந்த நெருக்கடியான நிலையால் சில நாடுகளின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நிறுத்தி வைத்த சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அது மட்டுமன்றி குறித்த நாடுகளுக்கான விசாக்களை பெறுவதும் இவர்களுக்கு சவாலாகவே இருக்கின்றன.

இந்தக் காரணங்களின் அடிப்படையில் விசாக்கள் நிராகரிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ஆகவே தமிழ் பெண்களின் நன்மை கருதி இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: