வைத்தியசாலைக்கு வருவோர் தடுப்பூசி அட்டையை கொண்டுவருவது – யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா  தெரிவித்துள்ளார்.

யாழ் .போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சண்முகநாதன் சிறிபவானந்தராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ் போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 120 வரையான ஒக்சிசன்  சிலிண்டர்கள் இதுவரை பாவிக்கப்பட்டு வந்தது. எனினும் தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக குறித்த சிலிண்டர் பாவனை 180 இற்கு மேல்  அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து மூன்று தடவைக்கு மேல் வாகனங்கள் அனுராதபுரம் சென்று சிலிண்டர்கள் பெற்று வருகின்றன.

அதேநேரம் யாழ்ப்பாண குடாநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக  அதிகரித்துள்ளதன் காரணமாக வைத்தியசாலை விடுதிகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அத்துடன் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திலும் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். எனவே தற்போதுள்ள நிலையில் மருத்துவ வளங்கள் அனைத்தும் கொரோனா தொற்றுக்குள்ளாருக்கு பாவிக்கப்படுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி போடாதவர்கள் தான் அதிகமாக இறப்பினை சந்திக்கின்றார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்தத் தடுப்பூசியைப் போடுவதன் மூலம்  உயிரிழப்புகளில்  இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

அத்தோடு இனிமேல் வைத்தியசாலைக்கு வருவோர் தமக்குரிய தடுப்பூசி அட்டையினை கொண்டுவருதல் மிக அவசியமான ஒன்றாகும்.  எனவே எதிர்வரும் காலத்தில் பொதுமக்கள் இந்த கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு உரிய வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதுடன் அனைவரும் இந்த தடுப்பூசியினை பெறவதன் மூலம் இந்த தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

எனவே பொதுமக்கள் தற்போதுள்ள நிலையை அனுசரித்து அனைவரும் செயற்படுவதன் மூலம் குறித்த தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: