வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதனின் முயற்சியால் மேலதிக உதவிதவிகளுக்கு நடவடிக்கை!
Sunday, December 23rd, 2018வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்படும் மக்களுக்கான உடனடித் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
கிளிநொச்சியில் நேற்று காலை தொடக்கம் திடீரென பெய்யும் தொடர் மழை காரணமாக கிளிநொச்சியின் தாழ்நிலப் பிரதேச கிராமங்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் வெகுவாக உயரத்தொடங்கியதன் விளைவாக அதன் வான்கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து வெளியேறிய நீர் தாழ்நிலப் பிரதேச கிராமங்களை நோக்கி பாய தொடங்கியதால் பன்னங்கண்டி, முரசுமோட்டை, சிவபுரம் முதலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளக்காடாக காட்சி தரும் குறித்த பிரதேச கிராமங்களில் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளகியுள்ளனர். திடீரென நீர்மட்டம் உயர்வடைந்து தமது வீடுகளுக்குள்ளும் புகுந்ததை அடுத்து மக்கள் செய்வதறியாது திகைத்து கையில் அகப்பட்டதை மட்டும் எடுத்தவாறு பாதுகாப்பை தேடி ஓட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இராணுவத்தினரின் அவசர உதவிகளையும் கோரியதை அடுத்து பல கிராமங்களில் மக்களை இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர். பொது அமைப்பினர்,இளைஞர் அமைப்புகள் என பலரும் மனிதநேயத்துடன் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் வெள்ளத்திலிருந்து மக்களை துரிதமாக மீட்கும் பணிகளுக்கென சிறப்பாக கடற்படையினர் வரவழைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மக்களின் பாதிப்புக்கள் குறித்த நிலவரங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்கள் பார்வையிட்டதுடன் குறித்த பிரதேசத்தில் மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்த 57ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களை சந்தித்து மக்களின் பாதிப்பு நிலவரங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியிருந்தார். இதனை அடுத்து மேலதிக இராணுவத்தினரை கொண்டு மேலும் பலர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
இதேவேளை கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும் அதன் அருகிலுள்ள 573ம் படையணி என்பனவும் வெள்ளத்தால் மூழ்கியிருந்தன. கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற வருட இறுதி விருந்துபசாரத்திற்கு சென்றிருந்த பணியாளர்கள் திடீரென வெள்ளம் சடுதியாக அதிகரித்திருந்ததை அடுத்து வர வழியின்றி திண்டாடியதை அடுத்து அவசர பணிக்கென வரவழைக்கப்பட்டவர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
குறித்த பிரதேசங்களின் ஆலயங்கள், பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்களின் அலுவலகங்கள் பலவும் நீரில் மூழ்கியிருந்தன.
மீட்புப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் இடர் முகாமைத்துவ நிலையம் இதுவரை சரியான தொகுப்பு அறிக்கையை வெளியிடவில்லை. இன்று காலை நிலவரங்களின்படி 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|