வெளியிடங்களிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதால் நாம் பெருநஷ்டமடைகிறோம் – சிறுப்பிட்டி விவசாயிகள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டு!

Thursday, February 8th, 2018

விவசாய அறுவடைக் காலத்தில்  தென்பகுதியிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதால் தாம் தமது உற்பத்திகளை உரிய விலைக்கு விற்கமுடியாமல் பெரும் நட்டத்தை எதிர்கொண்டுவருவதாக சிறுப்பிட்டி விவசாயிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்

வலி கிழக்கு சிறுப்பிட்டி பகுதியில் நேற்றையதினம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

விவசாய நிலங்களில் தாம் பயிரிடும் உருழைக்கிழங்கு, வெங்காயம், பீற்றூட், கரட் போன்ற பயிர்களை உற்பத்தி செய்து அவற்றை அறுவடை செய்யும் காலப் பகுதியில் தென்னிலங்கையிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் குறித்த விளைபொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

இதனால் உற்பத்தியாளர்களாகிய தாம் குறித்த உற்பத்திகளுக்கான பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலையில் பெரும் அவதியுறுவதாகவும் அதுமாத்திரமன்றி குறித்த விளைபொருட்களை குறைந்த விலையில் சந்தைப்படுத்துவதனால் தாம் மிகுந்த நஷ்டத்தை எதிர் கொள்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

நாம் எதிர்கொள்ளும் இந்த பிரச்சினைக்கு எதிர்காலத்தில் சரியான தீர்வு காணாதுவிடின் தமது வாழ்வு நிலை அந்தோ பரிதாபமாகும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் இதனால் தாம் நம்பிவாழும் விவசாயத்தை கைவிடவேண்டிய துர்ப்பாக்கியமும் ஏற்படும் நிலை உருவாகும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இதேபோன்று தமது வாழ்வாதார தொழிலாக கல் உடைக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறும் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த தொழில்சங்க பிரதிநிதிகள் கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற எனது விருப்பு நியாயமானதாக இருந்தாலும் எமக்கான அரசியல் பலத்தை நீங்கள் தருவதனூடாகவே உங்களது தேவைகளுக்கான தீர்வுகளை என்னால் பெற்றுத்தர முயும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts: