எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதற்கு எதனையும் செய்து முடிப்பேன் – ஜனாதிபதி!

Saturday, August 3rd, 2019

எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதற்கு தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு என்ற கருப்பொருளில் இடம்பெற்ற வடமேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இகுருணாகலை சேர். ஜோன் கொத்தலாவல மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்தின் பின்னர் பயங்கரவாதத்தை முற்றாக துடைத் தெரியும் புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டுமென இன, மத பேதமின்றி சமூகத்தில் கருத்து நிலவிய போதும் மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்காத சிலர் மரணதண்டனையை ஒழிப்பதற்கான சட்டங்களை விரைவாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றார்கள்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்காதிருப்பது அவர்களது உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் அல்லது தமது ஆட்சி அதிகாரத்திற்கு இந்த கடத்தல்காரர்களினால் பாதிப்பு ஏற்படும் என்று அறிந்திருப்பதன் காரணத்தினாலாகும்.

இதனை அறிந்து தான் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை தான் ஆரம்பித்திருப்பதாகவும், எந்த தடைகள் வந்தாலும் தனது இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை அதைரியப்படுத்தும் நோக்குடன் தனக்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைத்து வருவது அரசியல்வாதிகளினால் பலம்பெற்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களே.

எவ்வாறாயினும், எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதற்கு தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

Related posts: