வீதியால் செல்லும் பெண்கள் மீது மர்மகும்பல் தாக்குதல் – பீதியில் உறைந்தது ஊர்காவற்றுறை!
Friday, January 13th, 2017ஊர்காவற்றுறைப் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்மக்கும்பல் ஒன்று ஆள் நடமாட்டமற்ற வீதியால் பயணிக்கும் பெண்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்வதால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
கடந்த இரு தினங்களில் 3 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதல் சம்பவம் ஊர்காவற்றுறை செக்கன் வீதியில் ஆள் நடமாட்டமற்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை 4 மணியளவில் ஊர்காவற்றுறைப் பகுதியில் இருந்து நாராந்தனை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் இரவுக் கடமையை முடித்துக் கொண்டு குறித்த வீதியூடாக வீடு திரும்பிக் கொண்டிருந்த ஊர்காவற்றுறை வைத்தியசாலைப் பெண் பணிப்பாளர் மீது அதே இடத்தில் வைத்து பொல்லால் தாக்கியதுடன் நகைகளைக் கழற்றுமாறும் அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற சமயம் வீதியால் வேறு பயணிகள் வருவதை அவதானித்த தாக்குதலாளிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. இதில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
குறித்த மர்ம கும்பல் ஆள் நடமாட்டம் அற்ற இடத்தில் நின்று வழிப்பறி, திருட்டுக்களில் ஈடுபட முயற்சிப்பதாகவே சந்தேகிக்கப்படுகின்றது. மேலும் குறித்த தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸில் இதுவரை எவ்விதமான முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பித்தக்கது.
Related posts:
|
|