விதி மீறிய சாரதியின் விபத்தால் இறந்தவர் பேரில் ரூ.1.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

போக்குவரத்து விதிமுறைகளை மீறி விபத்தை ஏற்படுத்தி ஒருவரைச் சாவடையச் செய்த சாரதியை சாவடைந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு சாவகச்சேரி நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வீதியில் நடந்து சென்றவரை மோதி அந்தப் பகுதியைச் சேர்ந்த பாலரத்தினம் விமலராஜ் என்பவருக்குச் சாவினை ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து சாவடைந்தவரின் குடும்பத்துக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபா வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த நபருக்கு எதிராக கொடிகாமம் பொலிஸாரால் வீதியில் சென்றவரை மோதி சாவினை ஏற்படுத்தியமை, விபத்தினை தடுக்க தவறியமை, கவனமின்றி வாகனத்தைச் செலுத்தியமை, செல்லும் திசை மாறி வாகனத்தைச் செலுத்தியமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, பாவிக்க முடியாத வாகனத்தை செலுத்தியமை போன்ற ஆறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து ஆறு குற்றங்களுக்கும் மொத்தமாக 11 ஆயிரம் ரூபா தண்டமாக விதிக்கப்பட்டது.
Related posts:
|
|