குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் – வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் அவசர கோரிக்கை!

Saturday, January 2nd, 2021

வடமாகாணத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் தற்போது பிறந்திருக்கின்ற 2021 ஆம் ஆண்டு சாந்தியும் சமாதானமும் மிக்க ஆண்டாக திகழ வாழ்த்துக்களை தெரிவித்த வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், கடந்த வருடம் உலகத்தினை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் அச்சத்துடன் கடந்து சென்றுள்ளது.

அதேபோல் எதிர்வரும் காலத்திலும் உலக நியதிக்கு இணங்க வட பகுதியிலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்குரிய கட்டுப்பாடுகள், நடைமுறைகளை பின்பற்றி பொது மக்களை செயற்படுத்துவதற்கு பொலிசார் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்கள்.

அதேபோல வடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தை விட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்குரிய மேலதிகமான சில வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம். பொது மக்களை நல்வழிப்படுத்தி குற்றச் செயல்களை தடுத்து வடக்கு மாகாணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதே எமது நோக்கமாக காணப்படுகின்றது.

அத்துடன் வட மாகாணத்தில் தற்போது இடம்பெறுகின்ற சில கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் தொடர்பில் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து அதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த நடவடிக்கை மேலும் விரிவாக்கப்பட்டு சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி பொது மக்கள் சுதந்திரமாக வாழ பொலிசார் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்கள். அதேபோல் பொதுமக்களுக்கு ஒரு அழைப்பினை விடுக்க விரும்புகின்றேன்.

அதாவது சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் மற்றும் கொள்ளை செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் அறிந்திருந்தால் அதனை தெரியப்படுத்தினால் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடியும் என தெரிவித்தார்.

Related posts: