வாரிசு அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 4th, 2021

நாட்டில் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி உடைய ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பதனால் ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து ஆராய்வது கருத்துக்களை வெளியிடுவது அவசியமற்றது என அமைச்சர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சண்டே ஒப்சேவர் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் கூறுகையில் –  

பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை எதிர்கட்சியினரின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இது உங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருத்து தெரிவிக்கின்றனரே என்ற கேள்விக்கு அவர்கள் இது குறித்து கவலைப்படவேண்டிய தேவையில்லை எனக்கு என்னை பார்த்துக்கொள்ள தெரியும் என நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்கள் என்ற ஊகங்கள் உண்மையா என்ற கேள்விக்கு வாரிசு அரசியல் அல்லது அரசியலில் முன்அனுமானம் போன்றவை எதிர்காலத்தில் பலன் அளிக்கப்போவதில்லை என எப்போதும் கருதுபவன் நான் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நான் இது குறித்து பதிலளிக்கவிரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த சூழலில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார் இதன் காரணமாக நாங்கள் இந்த தருணத்தில் இது குறித்து ஆராயவேண்டிய அவசியமில்லை எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி உள்ள ஒருவர் ஜனாதிபதியாக உள்ளதால் இவ்வாறான விடயங்கள் பற்றி பேசுவது அவசியமற்றது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: