வருமானத்தை விட செலவுகளே அதிகமாகியுள்ளன – மீள்வதற்கு பொறுப்புள்ள சகலரும், ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிதி அமைச்சர் பஷில் கோரிக்கை!

Wednesday, September 8th, 2021

நாம் எதிர்பார்த்ததை விடவும் ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 600 பில்லியன் ரூபா குறைவான வருமானமே கிடைத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, நாட்டின் வருமானத்தை விடவும் செலவுகள் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான கடினமான நேரத்தில் தனியாக அரசாங்கத்தினால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றும் தெரிவித்த அவர் எதிர்க்கட்சிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

முழு உலகமும் எதிர்கொண்டுள்ள கொரேனா நெருக்கடிகளுக்கு நாமும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. நாடு பாரிய சர்வதேச வருமான நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றது.

அதேபோல் தேசிய நிதி விடயங்களிலும், திறைசேரி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார ரீதியிலும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இவற்றிக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வேளையில் முழு அரசாங்கம் மட்டுமல்லாது பொறுப்புள்ள சகலரும், எதிர்கட்சிகளின் ஒத்துழைப்புடனும் நாம் செயற்பட வேண்டும்.

இவ்வாறான கடினமான நேரத்தில் தனியாக பிரச்சினைகளை தீர்க்க முடியாது, அது முடியாத காரியம் என்பது எமக்கு தெரியும்.

கொரோனா தொற்று பரவலினால் ஏற்பட்ட நெருக்கடிகள் மட்டுமல்ல, கடந்த காலங்களில் கையாளப்பட்ட பொருளாதார செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்ட விளைவாகும்.

நாட்டின் வருமானத்தை விடவும் செலவுகள் அதிகரித்து சென்றுள்ளது. ஒரு இரு வருடங்களில் இருந்ததல்ல ஒரு இரு தசாப்தங்களுக்கு முன்பிருந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு கிடைக்கும் வருமானம், அரசுக்கு கிடைக்கும் வருமானம் என்பனவற்றை நாட்டின் செலவுடன் ஒப்பிடுகையில் நாட்டின் வருமானம் மிகக் குறைவாகவே உள்ளது.

ஒரு சில நேரங்களில் அநாவசிய செலவுகள், வீண் விரயம், ஊழல் என்பனவும் உள்ளதென்பது எமக்கு தெரியும். நீண்ட காலமாக இவை இடம்பெற்றவை என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எனவே உண்மையாக இந்த செலவுகளை குறைக்க முடிந்த நடவடிக்கைகளை எடுப்போம். மேலும் கொரோனா நிலைமைகள் காரணமாக எமக்குக் கிடைக்கவிருந்த வருமானமும் கிடைக்காது போயுள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: