வரி அடையாள இலக்கத்தை பயன்படுத்தி தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை இலக்கு வைத்து நிதி மோசடி – குருநாகல் மாவட்ட பிரதிப் பரிசோதகர் அலுவலகம் எச்சரிக்கை!

Friday, February 9th, 2024

இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி அடையாள இலக்கத்தை (TIN) பயன்படுத்தி தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை இலக்கு வைத்து நிதி மோசடி இடம்பெறுவதாக குருநாகல் மாவட்ட பிரதிப் பரிசோதகர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

குருநாகல் மாவட்ட டி.ஐ.ஜி அலுவலக அறிக்கையின் படி, மோசடி செய்பவர்கள் வங்கி அதிகாரிகளாகக் காட்டிக்கொண்டு, வரி அடையாள இலக்க திட்டத்தைப் பயன்படுத்தி தனிநபர்களின் வங்கி விவரங்களைப் பெறுகின்றனர்.

இந்த நிதி மோசடியில் பெரும் தொகையை இழந்த பல நபர்களின் விபரங்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்டேட் வங்கியின் பணியாளர்கள் என அழைக்கும் மோசடி செய்பவர்கள், வரி அடையாள இலக்கத்தைப் பற்றி வங்கியில் கணக்கை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து தெரிவிக்கும் மோசடி செய்பவர்கள், கணக்கை அமைக்க வேண்டிய வங்கி வாடிக்கையாளரின் பணப் பரிமாற்றக் குறியீட்டை (OTP) கேட்கின்றனர்.

மோசடிகாரரிடம் சிக்கியது தெரியாமல் சிலர் விசாரணை நடத்தாமல் OTP இலக்கத்தையும் கொடுத்து விடுகின்றனர்.

OTP பெற்றுக்கொள்ளும் மோசடிக் கும்பல், தாங்கள் தொடர்பு கொண்ட நபரின் வங்கிக் கணக்கில் நுழைந்து பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டுள்ளதாக குருநாகல் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய காலங்களில், குருநாகலைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 200,000 ரூபாய் வரை திருடப்பட்டுள்ளதுடன், மற்றொரு நபரிடம் இருந்து 1 இலட்சம் திருடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டயுள்ளார்.

இவ்வாறான மோசடிகளுக்கு ஆளாக வேண்டாம் என குருநாகல் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை குருநாகல் நகரில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: