வன்னி ஹோப் நிறுவனத்தினால் வறிய மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கி வைப்பு!

Wednesday, September 8th, 2021

அவுஸ்ரேலியாவில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் மலைய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் வறிய மாணவர்களுக்கு மூன்றாம் கட்டமாக ஸ்மாட் போன் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம்  வடமராட்சி கிழக்கு கோட்டக்கல்வி பணிமனையில்  உதவிக் கல்விப் பணிப்பாளரும் வன்னி ஹோப் நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டு மூத்த ஆலோசகருமான பீ. என். சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது.

நவீன கற்றல் வசதிகளை கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கும் நோக்குடன் வன்னி ஹோப் நிறுவனம் பல கல்வி சாரா செயற்றிட்டங்களை வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில்  ஹோப் நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில்  வடமாராட்ச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட  கட்டைக்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஆழியவளை கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கே இந்த ஸ்மாட் போன் வசதிகள் வழங்கப்பட்டது.     

கோவிட் பாதுகாப்பு சுகாதார வழிகாட்டலுக்கு அமைய நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன்,  விசேட அதிதிகளாக வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சத்தியபாலன், பிரதிக் கல்விப் பணிப்பாளர்  தெய்வேந்திரா, வன்னி ஹோப் நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தி திட்டத்திற்கா ஒருங்கிணைப்பாளர் தேவரஞ்சன் உட்பட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: