வட்டுக்கோட்டை அராலி பகுதியில் இளைஞர்களுடன் இணைந்து பொலிஸார் ரோந்து பணி!

Thursday, August 9th, 2018

 

வட்டுக்கோட்டை – அராலி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களைப் பீதிக்குள்ளாக்கும் இனந்தெரியாத நபர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளுர் இளைஞர்கள் பத்து பத்து பேர் வீதம் உள்ளடக்கி அவர்களோடு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இணைத்து குழுக்கள் அமைக்கப்படும். அந்தக் குழுக்கள் இரவு ரோந்து நடவடிக்கையை முன்னெடுக்கும்.  உடனடியாக அந்தக் குழுக்கள் அமைக்கப்படும் என்று யாழ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

அராலி பகுதியில் கடந்த சில வாரங்களாக அந்தப் பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக குள்ள மனிதர்கள் போன்று இருப்பதாகவும் சப்பாத்துக்களை அணிந்தவாறும் முகம் மற்றும் உடல் முழுவதையும் கறுப்பு உடையினால் மறைத்தவாறு வரும் சிலரே இவ் அச்சுறுத்தல் செயற்பாட்டில் ஈடுபடுவதாக அப் பகுதி மக்கள் பலரும் தெரிவித்தனர்.

இவ்வாறு வருவோர் வீட்டின் கூரைகள் மீது கல்லெறிந்து தாக்குவதாகவும் வீட்டில் இருப்பவர்களது கண்களில் தென்படும் வகையில் பதுங்கி இருந்து விட்டு பாய்ந்து செல்வதாகவும் அப்பிரதேசவாசிகள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பொலிஸ், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அப்பிரதேச மக்கள் ஆகியோருக்கிடையில் ஆலோசனை கூட்டமொன்று அராலி அம்மன் கோவிலடியில் நேற்று பிற்பகல்  3.30 மணிக்கு நடைபெற்றது.

மேற்படி சம்பவத்தினால் தினமும் இரவுப் பொழுதை அச்சத்துடனேயே கழிப்பதாகவும் இளைஞர்கள் ஊர்களில் அதிகாலை மூன்று மணி வரை காவல் செய்வதாகவும் அவர்களால் மறுநாள் ஒழுங்காக தொழிலுக்குச் செல்லவோ அல்லது மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளுக்குச் செல்லவோ முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

எனவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றை வழங்குமாறும் அப் பகுதியில் பொலிஸாரது ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்துமாறும் மக்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Related posts: