வடக்கில் மேலும் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கவேண்டியுள்ளது – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, August 6th, 2021

இலங்கை முழுவதும் தற்போது கொவிட்-19 மிகத் தீவிரமாக பரவி வருகின்றது.  இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் தவறியவர்களாக காணப்படுகின்றனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

இந்தப் பரம்பலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மூன்று வழிகளே உள்ளன.

முதலாவதாக அவசியமற்ற ஒன்று கூடல்களை விழாக்களை தவிர்த்துக் கொள்ளுதல். அவசியமின்றி வீடுகளுக்கு வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வணக்கஸ்தலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளை உட்பிரகாரங்களில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்படுகின்றது.

அண்மைக் காலமாக பல ஆலயங்களில் நடந்த திருவிழாக்கள் மூலம் கொரோனா தொற்று மிக வேகமாக பரவியதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இரண்டாவதாக பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்கின்றவேளைகளில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப்பின்பற்ற வேண்டும்.

முகக்கவசங்களை சரியான முறையில் அணிந்திருக்க வேண்டும். கைகளை கிரமமாக தொற்று நீக்கம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

மூன்றாவதாக பொதுமக்கள் கட்டாயமாக தமக்குரிய தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

தற்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் சினோபாம் முதலாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதன்படி யாழ். மாவட்டத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட 3 இலட்சத்து 44 ஆயிரத்து 766 பேரில் 2 இலட்சத்து 53 ஆயிரத்து 246 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட 72 ஆயிரம்  பேரில் 49 ஆயிரத்து 292 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட 65 ஆயிரம்  பேரில் 45 ஆயிரத்து 505 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட 77 ஆயிரத்து  781 பேரில் 52 ஆயிரத்து 532 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட 98 ஆயிரம்  பேரில் 77 ஆயிரத்து 311 பேருக்குமாக வட மாகாணத்தில் மொத்தமாக உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட 6 இலட்சத்து 57 ஆயிரத்து 547 பேரில் 4 இலட்சத்து 77 ஆயிரத்து 886 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்தில் இன்னமும் 30 வயதிற்கு மேற்பட்ட ஏறத்தாழ 200,000 பேர் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது உள்ள தீவிரமான கொரோனா பரம்பல் சூழ்நிலையில் பரம்பலைக் கட்டுப்படுத்தவும் இறப்புகளைக் குறைக்கவும் எம்மிடம் உள்ள முக்கியமான உபாயம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதே.

அத்துடன் இனிமேல் வைத்திய சாலைகளுக்கும் பொது இடங்களுக்குச் செல்வதற்கும் பொது போக்குவரத்துகளில் பயணிப்பதற்கும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது கட்டாய மாக்கப்படலாம்.

எனவே இதுவரை தடுப்பூசி ஏற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் உடனடியாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: