வடக்கில் சுட்டெரிக்கும் வெயில்: 20 நிமிடங்களுக்கு ஒரு தடைவ கட்டாயம் தண்ணீர் குடியுங்கள் – மருத்துவப் பிரிவு!

Friday, April 6th, 2018

வடக்கில் சில வாரங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இதிலிருந்து பாதுகாப்புப் பெற தண்ணீர் மற்றும் பானங்களை அதிகளவில் அருந்துங்கள். உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுப்பதற்கு தினமும் குறைந்தது 8 குவளை தண்ணி அல்லது பழச்சாறு அருந்த வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒரு தடைவ தண்ணீர் அருந்துவது சிறப்பானது.

இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். வெப்ப அதிகரிப்புக் காரணமாக உடலின் அங்கங்களான இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்றவை செயலிழக்கும் வாய்ப்பு ஏற்படலாம். இதனால் தலைச்சுற்று, தாங்கமுடியாத தலைவலி, தலைப்பாரம், தோல் ஈரலிப்பற்றதாக மாறுதல், தசைப்பிடிப்பு, வாந்தி, மனக்குழப்பம், வலிப்பு என்பன ஏற்பட வாய்ப்புள்ளது.

வெப்ப அதிர்ச்சியானது 4 வயதிலும் குறைந்த குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், 65 வயதிலும் கூடியவர்கள், இருதய மற்றும் சிறுநீரக நோய் உள்ளவர்கள், அதிகரித்த அல்லது குறைந்த உடல்நிறை உடையவர்கள், உயர் குருதியமுக்கம் மற்றும் நீரிழிவு நோய் உடையவர்கள், அதிகளவிலான மதுபாவிப்பவர்களை அதிகளவில் தாக்குகின்றது. இதிலிருந்து அனைவரும் பாதுகாப்புப் பெறவேண்டும். எனவே மென்நிற ஆடைகளை அணிதல், வெளியிடங்களுக்குச் செல்லும்போது தொப்பி, குடை பயன்படுத்துங்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்க கறுப்புக் கண்ணாடி அணியுங்கள் என்று மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts: