இலங்கை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் – விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Tuesday, February 23rd, 2021

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டை வந்தடைந்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமருடன் வந்த அந்நாட்டின் விமானப் படையின் விசேட விமானம் இந்நிய வான்பரப்பினூடாக பயணிக்க இந்திய அரசாங்கம் அனுமதியளித்திருந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று பிற்பகல் தரையிறங்கியது.

பாகிஸ்தான் பிரதமருக்கு விமான நிலையத்தில் இராணுவ மரியாதைகளுடன் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை வருகைதந்த பாகிஸ்தான் பிரதமர் மாலை 6 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் நாளையதினம் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

முன்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், அவரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின், இந்த ஆண்டிற்கான முதலாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயமாகவும் இது அமைந்துள்ளது.

அத்துடன் முக்கியமாக ஆடை மற்றும் அணிகலன், மருந்துப் பொருட்கள், விவசாய உணவுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகனப் பாகங்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிர்மானப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் போன்றவற்றிலான பாகிஸ்தானின் வர்த்தகத் தலைவர்களைக் கொண்ட ஒரு உயர் அதிகாரமுடைய வர்த்தக மற்றும் முதலீட்டு தூதுக்குழுவுடன் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ்.மாநகரின் நீர்வழங்கல் வடிகாலமைப்பின் கட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டும் – சபையில் ஈ.பி.டி.பி வலியு...
வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலரே இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கின்றனர் - யாழ்ப்ப...
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைக்கும் போட்டிப் பரீட்சையை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!