வடக்கின் மேம்பாடே எமது நோக்கம்!- யாழ். இந்திய துணைத்தூதுவர்
Tuesday, March 15th, 2016பொருளாதார அபிவிருத்திமிக்க மாகாணமாக வடக்கு மாகாணத்தை உருவாக்குவதே எமது நோக்கம் என யாழ். இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் 6 ஏக்கர் காணியில் 300 மில்லியன் ரூபாவில் தொழிற் பயிற்சி மையம் ஆரம்பிக்கவுள்ளமை தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற ஊட கவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதையே முக்கியமாகக்கொண்டு நாம் செயற்பட்டு வருகின்றோம். கடந்த வருடத்தில் தமிழ் நாட்டில் இருந்து முதலீட்டாளர்கள் இங்கு வந்துசென்றுள்ளார்கள்.
இந்த வருட இறுதிக்குள் தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வந்து முதலீடு செய்வதை நாம் வரவேற்கின்றோம்.
வடக்கின் பலாலி விமான நிலையம் மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றோம். மேலும் மீனவர் பிரச்சினை தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றோம். இது தொடர்பில் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் குறித்த விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டிருந்தார்.
இந்திய அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செய்து வருகின்றது. குறிப்பாக அச்சுவேலி தொழிற்பேட்டை ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும் அது தற்போது செயலற்றுக் காணப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.
மதுரையிலிருந்து 50 ஆயிரம் மல்லிகை கொண்டு வந்து வவுனியாவில் 40 ஆயிரம், யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் 10 ஆயிரம் என்று வழங்கியுள்ளோம். யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்தியன் கோனர் ஆரம்பித்துள்ளோம். இதற்கு இந்தியாவிலிருந்து பல நூல்களைக் கொள்வனவு செய்து வைத்துள்ளோம். இவற்றை அனைவரும் வாசித்து அறிய வேண்டும். இத்தகைய திடீர் திட்டங்கள் மக்களின் நன்மை கருதியே முன்னெடுக்கப்பட்டவையாகும்.
இதேவேளை, இங்கு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் உருவச்சிலையை வைக்கவுள்ளோம். குறிப்பாக அவ் உருவச்சிலை இந்தியாவிலிருந்தே கொண்டு வரப்பட்டு நிறுவப்படும். கடந்த வருடம் புனரமைக்க ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டரங்கான துரையப்பா விளையாட்டரங்கு அடுத்த மாத ஆரம்பத்தில் திறக்கப்படவுள்ளது.
அத்துடன் இந்திய தூதரகத்தில் கதக், யோகா, மற்றும் இந்திய மொழி என்பன இலவசமாக வழங்கப்படுகின்றது. இனி வரும் காலங்களில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான உதவிகள் வழங்கப்படும்.
இந்திய தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கலாசார கலை நிகழ்வுகள் யாழ். நகரத்தில் மட்டுமல்லாது வடக்கிலுள்ள கிராமங்களிலும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
Related posts:
|
|