வடக்கின் சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகள் அல்ல – பொலிஸ் மா அதிபர்

Sunday, July 16th, 2017

நாட்டை மீண்டும் பயங்கரவாதத்திற்குள் உட்படுத்துவதற்கு எந்த வகையிலும் இடமில்லை என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்திர தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வடக்கில் ஏற்பட்ட சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகள் அல்ல என்றும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.

நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்போர் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக பொதுமக்களின் நலனை கருதி மேற்கொள்ளக் கூடிய அனைத்து உடனடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர்  உறுதி தெரிவித்துள்ளதுடன், தற்பொழுது நாட்டில் நிலவும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் முயற்சிக்கின்றன. இவ்வாறன குறுகிய நோக்கங்கள் கொண்ட செயற்பாடு காரணமாக நாட்டை மீண்டும் பயங்கரவாதத்திற்குள் உட்படுத்துவதற்கு எந்த வகையிலும் இடமில்லை என்றும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.

வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு நட்பு ரீதியிலான பொலிஸ் சேவையை முன்னெடுப்பதற்காக ரஜரட்ட ஒலிபரப்பு சேவை முன்னெடுக்கும் பொலிஸாரும் நீங்களும் என்ற வேலைத்திட்டம் உதவும் என்றும அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ரஜரட்ட சேவையில் பொலிஸாரும் நீங்களும் என்ற நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது. ஒவ்வொரு ஐந்து மணித்தியாலத்திற்கு ஒருமுறை நாட்டின் பாதுகாப்பு தொடர்பான புலனாய்வு பிரிவின் தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகள் இதில் உண்டு.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தன் ஏனைய பிரதேச சேவைகள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் தாம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பூஜித் ஜயசுதந்திர மேலும் தெரிவித்தார்

Related posts: