வடகிழக்கு பருவப்பெயர்ச்சி – வடக்கு உள்’ளிட்ட பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, December 20th, 2022

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி படிப்படியாக நாட்டிற்கு குறுக்காக நிலைபெற்று வருவதால் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்வங்காள விரிகுடா கடற்பரப்புகளின் மத்திய பகுதிகளுக்கு மேலாக தொடர்ந்து நிலைகொண்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.

குறை அழுத்த பிரதேசம் எதிர்வரும் மூன்று நாட்களில் மேற்கு ௲ வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை நோக்கி கிரமமாகச் செல்லக்கூடிய சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடைக்கிடை கன மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது

மத்திய மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழமான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.

இதன் காரணமாக, கடற்பரப்புகளில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கடற்றொழிலில் ஈடுபடுவோர் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பிரதேச ரீதியான காலநிலையை நோக்குமிடத்து, காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும், இதனால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களை தவிர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: