வங்குரோத்தடைந்த நாடாக நீடிப்பதை நான் விரும்பவில்லை – நான் எடுக்கும் சில முடிவுகள் கடினமாக இருக்கும் என்று எனக்கும் தெரியும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, February 23rd, 2023

இன்னும் 25 வருடங்களில் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து அபிவிருத்தியடைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமது அரசியல் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு தன்னுடன் இணையுமாறு எவருக்கும் கூறவில்லை எனவும், மாறாக வீழ்ந்த நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு போட்டி எண்ணத்தை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு தாம் ஜனாதிபதியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட உறுதியுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேநேரம் எவ்வாறான தடைகள் வந்தாலும் இந்த வேலைத்திட்டம் நிறுத்தப்போவதில்லை எனவும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான வேலைத்திட்டம் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

அத்துடன் நாட்டின் பொருளாதார மீட்சியை உருவாக்குவதுடன் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பையும் அனைவரும் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் ஒரு நாடாக நாம் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் நேரத்தில் நான் இன்று உங்கள் முன்னிலையில் உரையாற்றுகிறேன். கடந்த 400 வருடங்களாக நாட்டில் இப்படியொரு நிலை ஏற்படவில்லை. இன்று நமது பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. நான் இங்கு பொதுவான பொருளாதாரப் விடயங்களைப் பற்றி பேசவில்லை. ஆனால் இந்த நிலை உங்கள் அனைவரையும் பாதிக்கிறது.

நான் நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சரிந்திருந்தது. நான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரதமர் பதவியை பொறுப்பேற்றார். முதலில் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டியது நமது கடமையாக இருந்தது. அதற்கிணங்க, நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இலங்கையை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் தேவையான எந்தவொரு முடிவையும் ஒரு வருடத்திற்குள் எடுப்பதற்கு நான் தீர்மானித்தேன்.

இது கடினமானதொரு பணியாகும். ஆனால் இந்த நாடு வங்குரோத்தடைந்த நாடாக நீடிப்பதை நான் விரும்பவில்லை. இந்த நாட்டு மக்கள் கஷ்டப்படுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. நாம் மீண்டும் எழுந்து நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதனால்தான் இந்த அனைத்து முடிவுகளையும் எடுத்தேன். அதற்கு பிரதமரும் எனக்கு ஆதரவளித்தார்.

ஆனால் நான் எடுக்க வேண்டிய சில முடிவுகள் கடினமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். அந்த முடிவுகளுக்காக எனக்கு திட்டுவாங்க நேரிடும்.ஆனால் இந்த முடிவுகளை எடுக்காமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், நான் ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை யோசித்தேன். அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன , எந்த அளவுக்கு அதிருப்தி ஏற்படும் என்று. எனவே இந்த முடிவை எடுக்க வேண்டுமா என்று நான் சிந்தித்துள்ளேன். ஆனால் நாட்டின் நலனுக்காகவும், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவும் அந்த கடினமான முடிவுகளை நான் எடுக்க வேண்டியிருந்தது.

நாம் வங்குரோத்தான நாடாகவும், பிச்சைக்கார நாடாகவும் இருக்க முடியாது. அதனால் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த ஆண்டுக்குள் நமது நாட்டின் பொருளாதார நிலையில் ஓரளவு முன்னேற்றம் காண்போம் என்று உறுதியளிக்கிறேன்.

சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை, ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் இருந்தது. அடுத்த சுவிஸ்டர்லாந்து, இலங்கைதான் என்று கணிக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று ஆப்கானிஸ்தான் மட்டுமே நமக்கு கீழே உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு உகந்த வகையில் நமது நாட்டின் எதிர்காலத் திட்டங்களை தயாரிக்க வேண்டும். அத்துடன் புதிய அரசியலமைப்பை நாம் தயாரிக்கும் போது அது இன்னும் 100 வருடங்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்க வேண்டும்..

ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன கூறியது போல், “இந்த நாட்டின் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்”. வெற்றியை அடைய நாம் மீண்டும் போராட வேண்டும். நமது மதிப்பைப் பாதுகாக்க நாம் தனியாகவும் குழுவாகவும் போராட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: