ரஷ்யாவின் தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்திற்கு – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் – வி தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி 15 ஆயிரம் ஸ்புட்னிக் – வி தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதுவரையில் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 88 பேருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 25 ஆயிரத்து 489 பேர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர். இந்தநிலையில், இன்று கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசி தொகை கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே

வெளிநாட்டு வேலைக்காகச் செல்ல இருக்கும் இலங்கை தொழிலாளர்களுக்கு, அந்தந்த நாடுகளுக்கு பொருத்தமான தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பமாகின்றது.

இந்த வேலைத்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் பணியகத்திற்கு செலுத்த வேண்டிய முழு தொகையையும் செலுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முன் பதிவு செய்ய வேண்டும்.

இந்த தடுப்பூசி நடவடிக்கைகள் நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும். அதற்காக ஒரு குறிப்பிட்ட திகதி மற்றும் நேரம் குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும்.

இதுவரையிலும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் மேற்பட்டோருக்கு பொருத்தமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைக்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் தொழிலாளர்கள் ஏதாவது சந்தேகங்கள் இருப்பின், 24 மணிநேர சேவையில் உள்ள 1989 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு தமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: