யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரது தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து சாவகச் சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் வெளிநடப்பு!

Monday, February 24th, 2020

மக்களின் முதன்மைத் தெரிவுகளை புறக்கணித்து தன்னிச்சையான தெரிவுகளை மக்களுக்கு திணிக்க முற்படும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரது செயற்பாட்டை கண்டிப்பதுடன் அவ்வாறு திணிக்கப்பட்ட முன்மொழிவுகளை எதிர்ப்பதாகவும் தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

இன்றையதினம் (24) சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்றபோது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் விவாதம் நடைபெற்றுள்ளது. இதன்போது கிராமத்திற்கு இரண்டு மில்லியன் ரூபா என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவால் வழங்கப்படவுள்ள அபிவிருத்தி நிதிக்கான முன்மொழிவுகளை ஏற்கனவே கிராமங்கள் தோறும் மக்கள் தமக்கு அத்தியாவசிய தேவையான விடயங்களை முன்னிறுத்தி கிராம சேவகர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச துறைசார் அதிகாரிகள் உள்ளூர் அரசியல்வாதிகள் என பலர் முன்நிலையில் தெரியப்படுத்தி உறுதி செய்திருந்தனர்.

இந்நிலையில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் தனது தன்னிச்சையான சுயநல தேவைகளுக்காக மக்களது முன்மொழிவுகளை புறக்கணித்து வேறு சில முன்மொழிவுகளை உள்வாங்கி அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றார்.

இது மக்களது முன்மொழிவுகளை புறக்கணிப்பது மட்டுமல்லாது மக்களை ஏமாற்றும் செயலாகவும் அமைந்துள்ளது. அத்துடன் குறித்த தெரிவுகளும் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி சார்ந்ததாக இருந்தாலும் அவை மக்களது அவசிய தேவை கருதியதானதாக இல்லாது தனிப்பட்ட ஒருசிலரது தேவைகளை முன்னிறுத்தியதாக அமைந்துள்ளது.

எனவே இத்தகைய சுயநல முன்மொழிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை என தெரிவித்து ஈழ மக்கள ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: