யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில்  27 இளைஞர்கள் கைது 

Thursday, April 28th, 2016

யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில்  27 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று வியாழக்கிழமை(28-04-2016)  தெரிவித்தனர்.  சுமார் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் வீதிகளில் அநாவசியமாக நிற்பவர்கள், திருட்டு, பெண்களுடனான சேஷ்டைகளில் ஈடுபடுபவர்கள் எனப்  பலர் தொடர்ந்தும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர் .

யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான விஷேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு அக்குழுவினர் பல்வேறு பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன்  திடீர்ச் சோதனை நடவடிக்கைகளிலும்  ஈடுபட்டு  வருகின்றார்கள். இவ்வாறு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் .

இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் சுமார் 50 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுப் பின்னர் நீதிமன்றத்தினால் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 27 இளைஞர்களையும் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts: