யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 ஆண்டுகள் பூர்த்தி!

Saturday, June 1st, 2024

தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றுதான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பொதுசன நூலகம், சிங்கள பேரினவாதிகளால் எரிக்கப்பட்ட நிகழ்வு.

உலகில் எங்கும் காணக்கிடைக்காத, பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த ஓலைச்சுவடிகள், வரலாற்று ஆவணங்கள், நூல்கள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என பல பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டிருந்ததது யாழ்ப்பாண நூலகம். 1981 ஜூன் 04ஆம் திகதி இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வேளை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர்.

1981 மே 31 ஆம் திகதியன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டுடிருந்த வேளை, மர்ம நபர்களால் அங்கு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.

இதில் வெடித்த வன்முறையால், யாழ்ப்பாணத்தின் பல வணிக நிறுவனங்கள், கடைகள், ஈழநாடு தினசரி அலுவலகம் போன்றவை கொளுத்தப்பட்டன.

இதன்போதுதான் பல வரலாற்றுப் பொக்கிஷங்களின் இருப்பிடமான யாழ்ப்பாண நுலகத்தையும் சிங்களப் பேரினவாத கும்பல் எரித்துச் சாம்பலாக்கியது. இந்த பண்பாட்டு அழிப்பு இடம்பெற்று இன்றுடன் 43 அகவைகள் பூர்த்தியாகின்றன.

1930 களில் கே.எம்.செல்லப்பா என்பவர் தான் சேகரித்து வைத்திருந்த நூல்கள், பத்திரிகைகளைக் கொண்டு 1933ஆம் ஆண்டில் தனது வீட்டிலேயே வாடகை நூலகம் ஒன்றை தொடங்கினார்.

சிலரின் ஆலோசனையின் கீழ் 1934 ஒகஸ்ட் 1ஆம் திகதியன்ற யாழ்ப்பாண பொது மருத்துவமனை வீதியில் வாடனை அறையொன்றை ஏற்பாடு செய்து 844 நூல்கள், 36 பருவ வெளியீடுகளுடன் யாழ்ப்பாண பொது நூலகம் தொடங்கப்பட்டது. இட நெருக்கடியின் காரணமாக 1936ஆம் ஆண்டில் நகர மண்டபத்துக்கு நூலகம் மாற்றப்பட்டது.

இவ்வாறு தமிழ் பண்பாட்டின் அடையாளமாக திகழ்ந்த நூலக எரிப்பானது, தமிழர்களை உளவியல் ரீதியாக அடுத்தகட்டத்துக்கு நகர்த்திய ஒரு வரலாற்று நிகழ்வாக மாறியது.

2003 ஆம் ஆண்டு எரிக்கப்பட்ட நூலகக் கட்டிடத்தை புதுப்பித்து திறக்க முயன்றது இலங்கை அரசாங்கம். அதற்கு தமிழ் தேசிய தமிழ் அரசியல் தலைவர்கள்  கடும் எதிர்ப்புகளை வெளியிட்டனர் ஆனால் அதையும் மீறி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கடின முயற்சியால் மீள் கட்டுமாணம் செய்யப்பட்டு தற்போது யாழ்ப்பாண நூலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் 97ஆயிரம் நூல்கள் எரிக்கப்பட்டமையானது, வெறும் நூலக எரிப்பு மட்டுமல்ல, தமிழர்களின் ஆறாத வடுக்களில் ஒன்றாக தற்போது வரையில் காணப்படுகின்றது. இது தமிழ் வாசிப்புப் பண்பாட்டுக்குப் பேரழிவு. காலத்தால் அழிக்க முடியாத இந்த சோகம் நிகழ்ந்து 43 வருடங்கள் உருண்டோடிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: