யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிடம் ஒன்றில் மோதல் – இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Wednesday, January 12th, 2022

யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கி இருந்து கல்வி கற்றுவரும் விஞ்ஞான பீடம் மூன்றாம் வருடத்தை சேர்ந்த மாணவர்களின் வீட்டிற்குள் புகுந்த நான்காம் வருட மாணவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூன்றாம் வருடத்தினை சேர்ந்த இரு மாணவர்கள் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நான்காம் வருட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை , கடந்த ஒருமாத கால பகுதிக்குள் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மூன்றாவது மோதல் சம்பவம் இதுவாகும்.

சில வாரங்களுக்கு முன்னர் பகிடிவதை கட்டளையை மீறியதாக முதலாம் வருட மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட சிரேஷ்ட மாணவன் ஒருவர் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: