யாழ்.பல்கலைகழகத்திற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரி நியமனம்!

Monday, August 26th, 2019

யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கம்பஹா விக்கிராமாரச்சி ஆயுர்வேத நிறுவகம் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பிரிவுகளுக்காக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நீக்கப்பட்டமையினால் யாழ். பல்கலைக்கழகத்துக்கு பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய யாழ். பல்கலைக்கழகத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரியாக ஓய்வுபெற்ற பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார். கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத நிறுவகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய பண்டார ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நிறுவகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட பல காரணங்களினால் பதவி நீக்கப்பட்ட மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பிரிவு பணிப்பாளருக்கு பதிலாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த குமார் திருநாவுக்கரசு பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts: