யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் “சிறைச்சாலை நூலகம்”நாளையதினம் அங்குரார்ப்பணம்!

Friday, April 7th, 2023

“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கு அமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில்,  யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகம் நாளை ஏப்ரல் 8 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைகழகம் தனது கற்றல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளுக்கு அப்பால் தான் சார்ந்த சமூகத்தின் மேம்பாட்டுக்காகச் சமூகப் பொறுப்பாண்மை மற்றும் சமூக வலுவூட்டல் செயற்பாடுகளில் அண்மைக் காலமாக ஈடுபாட்டு வருகின்றது. 

அதேபோலவே,  பல்கலைக் கழகத்தின் சமூகப் பொறுப்பாண்மையின் ஒரு அம்சமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் தனது சமூக வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நூலக நியமங்களுக்கு ஏற்றவாறான நூலகமொன்றை ஒழுங்கமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அம்முயற்சியின் முதல்படியாக ஏறத்தாழ 2500 புத்தகங்களை கொண்ட நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்படவுள்ளது. 

இதன் அடிப்படையில் சிறைச்சாலையில் வாழும் கைதி ஒருவர் தனக்கு தேவையான தகவல் வளங்களை அணுகுவதற்கான சந்தர்ப்பமொன்றை வழங்க வேண்டியது சமூகத்தின்  பொறுப்பாகும். அதுமட்டுமன்றி, ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகத் தகவல் அறியும் உரிமையும் அமைகிறது. இந்நோக்குகையே நூலகமொன்றின் தேவையை சிறைச்சாலைக்குள் உருவாக்கியுள்ளது.

கைதிகளின் தண்டனைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக அவர்களின் கல்வி, புனர்வாழ்வு மற்றும் தண்டனைக் காலத்தைப் பயனுள்ள முறையில் செலவிடுதல் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் வலியுறுத்துகின்றது. இச் சூழலமைவு சிறைச்சாலையின் சட்டதிட்டங்களுக்குட்பட்ட சிறைச்சாலை நூலகமொன்றின் உருவாக்கத்திற்கு வழிசமைக்கின்றது.

இதேநேரம் இலங்கையில் சிறைச்சாலை நூலகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடனேயே இயங்குகின்றன. அவை பெரும்பாலும் நூலக நியமங்களுக்கேற்ப ஒழுங்கமைக்கப்படுவதில்லை.  நன்கொடை மூலம் கிடைக்கும் நூல்கள் மற்றும் தளபாடங்களை கொண்டவையாகவே அவை காணப்படுகின்றன. இந்நிலையில் இலங்கையின் சிறைச்சாலை வரலாற்றில் முதன் முதலாக ஒழுங்கமைக்கப்பட்ட நூலகம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: