மே 20 ஆம் திகதியன்று நாட்டில் காணப்படும் கொரோனா நிலைமையை கருத்தில்கொண்டு வழிகாட்டி நடைமுறைகள் திருத்தப்படும் – சுகாதார அமைச்சு!

Sunday, May 2nd, 2021

கொரோனா தொற்று நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் மேலும் சில அறிவிப்புக்களுடன் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பின்படி, மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் பொருட்களைக் கொள்வனவு செய்வோருக்கு இடையில் கட்டாயம் ஒன்றரை மீற்றர் இடைவெளி இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அங்காடிகள், மொத்த வர்த்த நிலையங்கள், நிதி நிறுவனங்கள், புடவைக் கடைகள், சில்லறைக் கடைகளில், மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை 25 வீதத்துக்குள் மட்டுப்படுத்த வேண்டும். மேலும், திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் ஆகியன மூடப்பட வேண்டும்.

அத்துடன், பொதுப் போக்குவரத்தின் போது, ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். வாடகை வாகனப் பயன்பாட்டின் போது முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் வாகனங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும்.

வேறு வகையான வாடகை வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும் எனபதுடன் இறுதிக் கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளதாகவும் வெசாக், றமழான் பெருநாள்களை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் விடுதிகளில் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது. அரச ஊழியர்கள், பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் வருகை தர வேண்டும்.

தனியார் துறை ஊழியர்கள் குறைந்தளவானோர் அலுவலகத்துக்கு சமுகமளிக்க வேண்டும். மாநாடு, கருத்தரங்கு, கூட்டங்கள், பகல் போசன விருந்துபசாரம், மே 21 வரை தடை செய்யப்பட்டுள்ளன.

மத வழிபாட்டு இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூட முடியாது. கைதிகளைப் பார்வையிட முடியாது. நீதிமன்றத்தில் முழுக் கொள்ளளவு 25 வீதத்துக்கு இருக்க வேண்டும். மக்கள் வருகை தர முடியும்.

இசைக் கச்சேரி, கரையோர ஒன்றுகூடல்கள், உற்சவங்களுக்கு முழுத்தடை மற்றும் மே நான்காம் திகதி முதல் மே 20 ஆம் திகதி வரை திருமண வைபவங்களுக்கு அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மே 20 ஆம் திகதியன்று நாட்டில் காணப்படும் கொரோனா தொற்றுப் பரவல் நிலைமையை கருத்தில்கொண்டு குறித்த வழிகாட்டி நடைமுறைகள் திருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: