மென்பானங்களின் சீனியின் அளவு பரிசோதிக்கப்படும்!

Tuesday, August 16th, 2016

பாவனையிலுள்ள மென்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவு வர்ணங்களில் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதற்கான சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த விதி முறைகளை கடைபிடிக்கத் தவறும் விற்பனையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இதற்கான கிரபிக் லயிட் ஸ்டம் லேபிள் முறையின் கீழ் மென்பான போத்தல்களில் மில்லி மீற்றர் அடங்கியுள்ள சீனி அளவு குறிப்பிடப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே குளிர்பானங்களை பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதா? என்பதை நுகர்வோர் தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது.

இலங்கையில் தொற்றா நோயை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு நடவடிக்கையாக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் மஹிபால தெரிவித்துள்ளார்.

சீனியினால் ஏற்படும் பாதிப்புக்கான சமிக்ஞையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து இனிப்பு பானங்களின் போத்தல்களில் இவ்வாறான லேபிள்கள் இடம்பெற வேண்டும். இந்த லேபிளில் பானத்தில் அடங்கியுள்ள சீனியின் அளவு விபரமாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இதே வேளை ,இலங்கைக்கு கொண்டு வரப்படும் பால்மா, இறைச்சி, மீன் போன்ற அனைத்து உணவு வகைகளும் பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமென்று விசேட வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவற்றை சந்தைக்கு விநியோகிக்க முன்னர் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். உணவு பானங்கள் தொடர்பில் உள்ள சட்ட விதிகள் போதுமானதல்ல என்றும் அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: