சரியான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்க வேண்டும் – ஜனாதிபதி!

Wednesday, August 28th, 2019


நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்த சரியான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்க வேண்டும் என ஜனாதிபதி என்ற வகையில் தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அவ்வாறான சரியான தொலைநோக்கு மற்றும் திட்டத்தின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே கல்விமான்கள் நிறைந்த சிறந்ததோர் நாடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

றுகுணு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் இடம்பெற்ற 13வது இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

உயர் கல்விக்காக வருடாந்தம் ஒதுக்கப்படும் மூலதன செலவு கடந்த வருடங்களில் 60 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டதாகவும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அத்தொகை 45 பில்லியனாக மட்டுமே இருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் 2013 – 2014 ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் 24,198 என்பதுடன், கடந்த 2018 ௲ 2019ஆம் ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 31158 வரை அதிகரித்து இருப்பதாகவும் இது 28% வளர்ச்சியாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மருத்துவம், பொறியியல், தொழிநுட்பம், விஞ்ஞான துறைகளுக்கு அதிக மாணவர்களை உள்வாங்க வேண்டியது அவசியமாகும் என்பதுடன், அதற்காக அனைத்து பல்கலைக்கழகங்களும் புதிய பீடங்களை உருவாக்கி அவற்றிற்கு தேவையான வசதிகளை அதிகரிப்பது மட்டுமன்றி புதிய பட்ட மற்றும் பட்டபின்படிப்பு கற்கை நெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மகாபொல புலமைப்பரிசில் நிதியை 2500 ரூபாவில் இருந்து 5000 ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், பல்கலைக்கழக கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக துறைசார்ந்த அறிஞர்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி 2014 ஆம் ஆண்டு இறுதியில் 3821 அமெரிக்க டொலர்களாக இருந்த தனிநபர் வருமானத்தை 4060 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Related posts:

நெடுந்தீவு – வேலணைப் பிரதேச செயலகங்களுக்கு ரூபா 11 மில்லியனில் 5 முக்கிய கருத்திட்டங்கள்!    
ஆணாதிக்க சமுதாயக் கட்டமைப்பிற்குள் கூட இலங்கையில் பெண்களுக்கு பாரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது...
ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசு வங்குரோத்து அடையவில்லை - அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ...