முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை – வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Saturday, August 5th, 2023

முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளது. குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கையில் உள்ள வைத்திய நிபுணர்கள் அதிகம் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள்.

இறுதியாக நடைபெற்ற கலந்துரையாடலில் இரண்டு வைத்தியசாலைகளுக்கும் இரண்டு வைத்தியர்களையாவது நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது

அதனை நாங்கள் தற்போது தொடர்ந்து கேட்கின்றோம். எதிர்வரும் காலத்தில் நிரந்தர வைத்திய நிபுணர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

விஷேட ஆளணி எங்களுக்கு தேவையாக உள்ளது. நிதி அமைச்சு புதிய ஆளணியை நியமிக்காத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.

உள்ளக கட்டமைப்பிலும் விரைவான அபிவிருத்தி தேவையாகவுள்ளது. அதற்கு திட்டம் ஏதாவது இருந்தால் மேற்கொள்ள வேண்டும்.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் காணி பிரச்சினை தாமதமானதால் பாரிய கட்டிடங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

அதேபோல் மன்னாரிலும் சீரி ஸ்கான் வந்து திரும்பி போனதால் பிரச்சினை இருந்தது. அங்கும் நிரந்தர வைத்திய பணிப்பாளர் இல்லாமை ஒரு பிரச்சினையாக உள்ளது எனவும் சட்டிக்காட்டியருந்தார்.

இந்நிலையில் உள்ளக கட்டமைப்பை பேணும் இரண்டு வைத்தியசாலையிலும் குறைபாடாக இருக்கிறது. இது தொடர்பாக கூட்டத்தில் தீர்மானமாக எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்களுடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டு இதனை நிவர்த்தி செய்வோம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: