முன்னாள் சபாநாயகர் காலமானார்!

Tuesday, April 26th, 2016

முன்னாள் சபாநாயகரும், சிரேஷ்ட முஸ்லிம் அரசியல்வாதியுமான எம்.எச். முஹம்மது இன்று காலை கொழும்பில் காலமானார்.

சில நாட்களாக கடும் சுகவீனமுற்றிருந்த இவர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை அவர் கொழும்பில் காலமானார்.

1925ம் ஆண்டு கொழும்பில் பிறந்த அவர், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் சமகால அரசியல்வாதியாக மாநகர சபை ஊடாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து, நாடாளுமன்ற உறுப்பினர், போக்குவரத்து, முஸ்லிம் விவகார அமைச்சர் , சபாநாயகர் என்று பல்வேறு பதவிகளை அலங்கரித்துள்ளார்.

1990ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவுக்கு எதிரான தேசத்துரோக குற்றச்சாட்டின் போது அன்னாரை பாதுகாப்பதில் எம்.எச். முஹம்மது மற்றும் முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஆகியோர் முக்கிய பங்காற்றியிருந்தனர்.

எம்.எச். முஹம்மது சபாநாயகர் என்ற வகையில் அரசியல் ரீதியாக பிரேமதாசவுக்கு உதவ, அஷ்ரப் சட்ட ஆலோசனைகள் மூலம் அவருக்கு பக்கபலமாக செயற்பட்டிருந்தார். அதன் பின்னர் 2006ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சுதந்திரக்கட்சிக்கு தாவிய எம்.எச். முஹம்மது , மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்டிருந்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையும் இவரின் கீழ் செயற்பட்டிருந்தது.இவர் அக்காலத்தில் முன்னெடுத்த செயற்திட்டங்களை பின்வந்த காலத்தில் பூர்த்தி செய்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய, எம்.எச். முஹம்மதுவுக்கு கிடைக்க வேண்டிய பெருமையை தட்டிப் பறித்துக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர் 2010ம் ஆண்டு தொடக்கம் அரசியலில் இருந்து ஓய்வெடுத்த எம்.எச். முஹம்மது தொடர்ந்தும் சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.அரசியல் மற்றும் சமூக சேவை ஊடாக மூவின மக்களின் நன்மதிப்பையும் அவர் வென்றெடுத்திருந்தார்.

இன்று மாலை 3.30 மணிக்கு அவரது நல்லடக்கம் ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் நடைபெறவுள்ளது.

Related posts: