மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – தற்காலிகமாக கைவிடப்பட்டது மின்சார பொறியியலாளர்கள் சங்க பணிப்பகிஷ்கரிப்பு!

Thursday, June 9th, 2022

மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய சில சேவைகள், அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2283/33 எனும் ஜூன் 08 ஆம் திகதியிடப்பட்ட குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய,

மின்சாரம் வழங்கல் மற்றும் வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள் மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உபசரிப்பு பாதுகாப்பு, போசாக்கூட்டல், சிகிச்சை அளித்தல் ஆகியன தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவொரு சேவைகள், தேவைகள், பணிகள், தொழில்கள் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் மின்சார சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்துள்ளார்.

தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடலை நடத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களுக்கு எதிராக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நேற்று(08) நள்ளிரவு பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தரம குறிப்பிடத்தக்கது.

Related posts: