மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை –  எரிபொருள் பாவனையை நீக்க உத்தேசம்!

Saturday, November 11th, 2017

2025 ஆம் ஆண்டளவில் அனைத்து அரச வாகனங்களும் ஹைபிரிட் அல்லது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக மாற்றப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் மங்களசமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டது.  இதன்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டீசலில் இயங்கும் முச்சக்கரவண்டிகளுக்கு 50,000 ரூபா மேலதிக வரி விதிக்கப்படவுள்ளதாகவும் மின்சாரத்தில் இயங்கும் காருக்கு 10 லட்சம் ரூபா வரி குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்..

முச்சக்கரவண்டி சாரதிகளை சுற்றுலா வழிகாட்டிகளாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான பயிற்சிகளை சாரதிகளுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார். இலங்கையில் தற்போது 1.3 மில்லியன் முச்சக்கரவண்டி சாரதிகள் உள்ளனர். அவர்களை மையப்படுத்தி Tourist Board Approved Tuk Tuk எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் முச்சக்கரவண்டி சாரதிகளை தொழில் முயற்சியாளர்களாக மாற்றி அவர்களின் பொருளாதார நிலையை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.இதே வேளை அதி சொகுசு வாகனங்களுக்கு விசேட சொகுசு வரியை அறவிடவும் இலத்திரனியல் வாகனங்களுக்கு 10 இலட்சம் ரூபா இறக்குமதி வரியை நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

இதே வேளை நாட்டில் பயன்பாட்டில் உள்ள முச்சக்கரவண்டிகளை பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.முச்சக்கரவண்டிகளுக்கான மானி கட்டாயமாக்கப்படுமெனவும் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மின்சாரத்தில் இயங்கும் விளையாட்டு வாகனங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கவும் நிதியமைச்சரால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டிகள் மற்றும் பஸ்களுக்கு வரி மானியம் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தில் இயங்கும் 50 பஸ்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்காக நாடளாவிய ரீதியில் 63 மின்னூட்டமேற்றும் நிலையங்களை விரைவில் அமைக்க நடடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.

Related posts: