மாணவர்களை கருத்தில் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் – போக்குவரத்து அமைச்சர்!
Thursday, December 1st, 2016போக்குவரத்து விதிமுறைகளுடன் தொடர்புடைய ஏழு குற்றங்களுக்கு விதிக்க திட்டமிடப்பட்ட 25 ஆயிரம் ரூபா அபராத தொகை, இடப்புறமாக முந்திச் செல்லுதல் சார்ந்த குற்றத்திற்கு மாத்திரம் அமுலாகும் வகையில் திருத்தப்படவுள்ளது.
முச்சக்கர வண்டிச் சங்கம், பாடசாலை வான் சங்கம், மோட்டார் சைக்கிள் சங்கம் முதலான அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னார் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மதுபோதையுடன் வாகனம் செலுத்தல், அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தல், காப்புறுதி சான்றிதழ் இன்றி வாகனம் செலுத்தல், ரெயில்வே கடவைகளில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்தல், அதிக வேகம், அனுமதிப் பத்திரமின்றி இன்னொருவரை வாகனம் செலுத்த அனுமதித்தல் முதலான ஏழு குற்றங்களுக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிப்பதென யோசனை கூறப்பட்டது.
எனினும், போக்குவரத்து சங்க பிரதிநிதிகள் சமர்ப்பித்த யோசனைகளை பரிசீலித்த பின்னர், இது பற்றி அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்து நிவாரணம் அளிக்க இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவிக்கையில்: முச்சக்கர வண்டிகளுக்கான உச்ச வேகத்தை மணிக்கு 40 கிலோ மீற்றர் என்ற மட்டத்தில் இருந்த 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க வேண்டும். மோட்டார் சைக்கிள்களுக்கான வேகக் கட்டுப்பாட்டு எல்லை மணிக்கு 50 கிலோ மீற்றர் என்ற மட்டத்தில் இருந்து 70 கிலோ மீற்றர் வரை உயர்த்த வேண்டும் என்பது தொடர்பில் தாமும் இணங்குவதாக அமைச்சர் கூறினார். இந்த ஏற்பாடுகள் மோட்டார் வாகன கட்டளைச் சட்டம் திருத்தப்பட்டதன் பின்னரே அமுலுக்கு வரும் என அவர் கூறினார்.
இத்தகைய பின்புலத்தில் அபராத தொகை தொடர்பான வதந்திகளுக்கு அஞ்ச வேண்டாமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார். சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமெனவும் போக்குவரத்து அமைச்சர் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
Related posts:
|
|