மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் – மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் வலியுறுத்து!

Thursday, April 29th, 2021

மன்னார் மாவட்டம் தற்போதைய சூழ் நிலையில் பாதுகப்பாக உள்ள போதிலும், கவனம் இன்றி நடந்து கொண்டால் எதிர்வரும் நாட்களில் பாரதூரமான நிலையை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல்,  மக்கள் உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான விசேட ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது. குறித்த விசேட ஆலோசனைக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முப்படையினர், அரச தனியார் போக்குவரத்து சங்க பிரதி நிதிகள், பிரதேசச் செயலாளர்கள் மற்றும் துறை சார் திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலம் தெரிவிக்கையில் –

பொதுப் போக்குவரத்து சார்ந்து பயணம் செய்பவர்களுக்கு போக்குவரத்து துறையினர் உரிய சுகாதார நடைமுறைகளை அறிவுறுத்தி சேவைகளை மேற்கொள்வதோடு, பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாத்திரமே பயணிகளை ஏற்றுவதுடன், பயணம் செய்பவர்கள் முகக்கவசம் அணிவதை பேருந்தின் சாரதி, நடத்துனர்கள் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு வந்த 4 நபர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

அவர்களுக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொண்ட போது அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது இந்திய மீனவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வருவதாக குறித்த கலந்துரையாடலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து மீனவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், விழிர்ப்புணர்வையும் வழங்க ஆலோசித்துள்ளோம்.

அதேநேரம் பொது மக்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும். பொலிஸார் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் மாவட்டத்தில் நடை முறைப்படுத்துவதற்கு கலந்துரையாடி உள்ளோம்.

தற்போது ஏற்பட்டுள்ள மிகவும் ஆபத்தான ஒரு சூழ் நிலையை பொதுமக்கள் கருத்தில் கொண்டு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: