மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான வதிவிட விசா!

Tuesday, April 26th, 2022

இலங்கை மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வணிக வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான வதிவிட விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நீண்டகால வதிவிட விசா வழங்கும் பொறிமுறைக்குப் பதிலாக புதிய முறைமையொன்றுக்கு 2021 மார்ச் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இப்பொறிமுறையின் கீழ் குறிப்பிட்ட நீண்டகால வதிவிட விசா வழங்குதல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரான அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கூட்டு ஆதனங்களின் பெறுமதி குறைந்தபட்சம் 75,000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு மேலதிகமாக முதலீடு செய்கின்ற வெளிநாட்டவர்களுக்கு மற்றும் வெளிநாட்டுக் கம்பனிகளின் இயக்குநர்களுக்கு, அவர்களுடைய துணைவருக்கும் தங்கி வாழ்பவர்களுக்கும் அவ்வாறு முதலிடுகின்ற அமெரிக்க டொலரின் அளவுக்கமைய 5 ஆண்டுகள் தொடக்கம் 10 ஆண்டுகள் வரையான நீண்ட கால வதிவிட விசா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வணிக வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான வதிவிட விசா வழங்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் “தங்க சுவர்க்க விசா நிகழ்ச்சித் திட்டம்” எனும் பெயரிலான நிகழ்ச்சித்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: