மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெடுத்து செல்வது சட்டவிரோத செயலாகும் – முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டு!

Sunday, September 25th, 2022

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெடுத்து செல்வது சட்டவிரோத செயலாகும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரச நிறுவனத்தையும் மக்கள் பிரதிநிதி ஒருவர் இல்லாமல் கொண்டு செல்வது குற்றமாகும். உள்ளூராட்சி மன்றங்கள், தேர்தல் இன்றி ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களினால் செயற்படுத்தப்படுவது, பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறலாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த காலங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை என மக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவை தூற்றினர். எனினும், நீதிமன்றிக்கு சென்றதும், நாடாளுமன்றினால் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

பழைய முறையில் அல்லது புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாகாண சபை முறைமை கொண்டு செல்ல வேண்டுமாயின் மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: