ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் பரீட்சைகள் இடம்பெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, October 7th, 2020

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேவையான சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப பரீட்சைகள் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களின் மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களும் பாரீட்சை எழுதுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்  அறிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் அதே நேரத்தில் க.பொ.த. உயர்தர பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நவம்பர் 06 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

UPDATE 01 கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்துவது குறித்த இறுதி முடிவு இன்று பிற்பகல் 02:00 மணிக்கு அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்பதாக குறித்த பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று அறிவித்திருந்தார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் 11 ஆம் திகதி 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நடாத்த திட்டமிடப்பட்டது.

எனினும் குறித்த இரு நாட்களிலும் பரீட்சையை நாட்டதுவது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டு பிற்பகல் 02:00 மணிக்கு அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: