மக்கள் அச்சமடையத் தேவையில்லை – நலன்புரித்திட்டக் கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் ஷெஹான் சேமசிங்கஅறிவிப்பு!

Wednesday, June 28th, 2023

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 794 ஆட்சேபனைகளும் 3 ஆயிரத்து 300 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இவற்றினை ஆராய்ந்து பொருத்தமானவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நீரிழிவு நோயாளர்கள், முதியோர் மற்றும் அங்கவீனமுற்றோர் தொடர்பான பெயர் பட்டியல் இவ்வார இறுதியிலேயே வெளியிடப்படும். எனவே இந்தக் கொடுப்பனவுகளைப் பெறுவோர் வீண் அச்சமடையத் தேவையில்லை

நீரிழிவு நோயாளர்கள், முதியோர் மற்றும் அங்கவீனமுற்றோர் அஸ்வெசு திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்ற போலியான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் அவர்களது பெயர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.

இவ்வார இறுதியில் குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்படும். எனவே இது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பெயர் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டதல்ல. ஆட்சேபனைகள் , எதிர்ப்புக்கள் அனைத்தும் ஆராயப்பட்டு அதன் பின்னரே இறுதியான பயனாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ள பயனாளிகள் குறித்த தகவல்கள் வீடுகளை அடிப்படையாகக் கொண்டவையல்ல. மாறாக வீடொன்றில் வசிக்கும் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

எனவே ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்பட்டால் அவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும். வெளிப்படை தன்மையுடனேயே இந்த தெரிவுகள் இடம்பெறுகின்றன.

எதிர்வரும் ஆகஸ்டில் அடுத்த வருடத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படும். இவ்வாறு வருடாந்தம் இந்த தகவல்கள் புதுப்பிக்கப்படும்.

சமுர்த்தி உள்ளிட்ட ஏனைய சகல அரச கொடுப்பனவுகளும் இந்த வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படும். இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 1924 என்ற அவசர தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரையில் ஒரு இலட்சத்து 88 794 ஆட்சேபனைகளும் , 3300 எதிர்ப்புக்களும் கிடைத்துள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: