மக்களின் வறுமையை விலைபேசும் கூட்டம் நாமல்ல – ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் தோழர் ஜீவன்!

Tuesday, November 21st, 2017

எமது கட்சிக்கு கிடைக்கும் பலம்பொருந்திய அரசியல் வெற்றி என்பது தமிழ் மக்கள் தமது விடியலை பெற்றுக் கொள்வதற்கான திறவுகோலாகவே அமையப்பெறும் என்பதில் மாற்றுக் கருத்திருக்காது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

வேலணை அம்பிகைநகர் பொதுமண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இதுவரை காலமும் ஏமாற்றுத் தலைமைகளை நம்பி தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்தமையை தவிர வேறெதனையும் பெற்றுக்கொண்டதாக வரலாற்றில் பதியப்படவில்லை.  அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள் இன்று அனுபவிக்கும் பெரும் துன்ப துயரங்களுக்கும் போலித் தமிழ் தேசியம் பேசும் தூரநோக்கற்றவர்களது வெற்றுப் பேச்சுக்களே காரணமாக இருந்துவருகின்றது.

தேர்தல் காலம் வரும்போது மக்ளிடம் சென்று வாக்குறுதிகளை வழங்கி மக்களின் உணர்வுகளையும் அவர்களது அபிலாஷைகளையும் விலைபேசி அரசியல் சுயலாபம் அனுபவிப்பவர்கள் நாமல்ல. இத்தகைய தூரநோக்கற்றதும் மக்கள் நலன் சாராததுமான செயற்பாடுகளை  எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஒருபோதும் விரும்பியதும் கிடையாது.

இதனால்தான் அவரை நோக்கி கடும் அச்சுறுத்தல்கள் வந்தும் கூட அவர் சிறிதளவேனும் மக்கள் பணிகளிலிருந்து பின்வாங்காது மக்களுடன் மக்களாக இருந்து இன்றுவரை சேவை செய்துவருகின்றார்.

மக்களுக்கு உண்மையான சேவகராக அவர் இருப்பதனால் தான் இன்றுவரை அவரை யாழ்ப்பாணத்து தமிழ் மக்கள் தமது நாடாளுமன்ற பிரதிநிதியாக எத்தகைய சூழலிலும் நாடாளுமன்றம் அனுப்பி தமக்கான தேவைகளை வென்றெடுத்து வருகின்றனர்.

ஆனாலும் தமிழ் மக்கள் இன்றுவரை அத்தகைய மக்கள் சேவகரிடம் எமது கரங்களுக்கு அதிகரித்த அரசியல் பலத்தை இன்றுவரை கொடுத்திருக்கவில்லை. அதிகரித்த அரசியல் பலத்தை தமிழ் மக்கள் தந்திருந்தால் இன்று தமிழர் தாயக பகுதிகள் எங்கும் அவலங்களும் வறுமையும் துடைத்தெறியப்பட்டு புதிய அத்தியாயத்தை உருவாக்கி காட்டியிருந்திருப்போம்.

ஆனால் தமிழ் மக்கள் இன்று தமிழ் தேசியம் என்ற போர்வையில் திரியும் போலிகளின் முகங்களை கிழித்துப்பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதனால் அவர்கள் தமது அரசியல் தலைமையாக மக்களை நேசிக்கும் சுயநலமற்ற தலைவராக இன்றுவரை மக்களுடன் இருந்து பெரும்பணிகளை செய்துவரும் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களுக்கு தமது அரசியல் அதிகாரத்தை வழங்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவாறு காத்திருக்கின்றனர்.

இதற்கான களமாக வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அமையும். அந்த வெற்றியூடாக எமது மக்களின் வாழ்வியலில் பல மாற்றங்களை உருவாக்கி மக்களின் அடிப்படை தேவைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வென்றெடுத்து கொடுக்க நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்  மற்றும் கட்சியின் வேலணை பிரதேச முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.

Related posts: