போதைப்பொருள் ஒழிப்புக்கும் ஆலோசனைக்குழு!

Friday, June 28th, 2019

போதைப்பொருள் வேலைத் திட்டத்துக்கு என விஷேட ஆலோசனை சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடைமுறைப்படுத்தப்படும் போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலக பிரிவு மற்றும் ஏனைய சில பிரிவுகள் ஒன்றிணைந்து மிகவும் நவீன மற்றும் விரிவுப்பட்ட வகையில் இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக இந்த சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரட்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்விலேயே செயலாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

போதைப் பொருள் ஒழிப்பு வாரம் கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 1 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

நேற்று இடம்பெற்ற சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரசாங்கத்தினால் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த வேலைத் திட்டத்தில் தற்பொழுது போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டு சட்டத்தில் மூலம் பிடிப்பட்ட சுமார் 11 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. போதைப் பொருளை பயன்படுத்திய போதிலும் சட்டத்தில் சிக்காத சுமார் 1 லட்சம் இளைஞர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இளைஞர்கள் இந்த போதைப் பொருள் பிடியில் சிக்காது இருப்பதற்கு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார். இதனை அரசாங்கத்தினால் மாத்திரம் தனியாக செய்துவிடமுடியாது அனைத்து தரப்பினரும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related posts: