பொருளாதார வாய்ப்புக்களை மேம்படுத்தும் பொறுப்பை தனியார் துறை ஏற்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, April 22nd, 2023

இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேற்படி பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின மிகச்சிறந்த 40 வர்த்தகர்களக் விருது வழங்குவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற பிஸ்னஸ் டுடே விருது வழங்கல் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும். அது தொடர்பில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்களுடனும் பெரிஸ் கிளப் பிரதானியுடனும் சூம் தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடியிருந்தோம். நாம் முன்னேறிச் செல்வதற்கான ஊக்குவிப்பை அவர்கள் வழங்கியிருந்தனர். அதேபோல் சீனாவுடனான பேச்சுவார்த்தைகளும் தொடர்ச்சியாக இடம்பெறுகிறன.

நாம் நெருக்கடிகளிலிருந்து துரித கதியில் மீண்டு வந்துள்ளமை வியப்புக்குரியதாக இருந்தாலும், உங்களால் தாங்கிக்கொள்ள கூடிய கடினமாக தீர்மானங்கள் பலவற்றை மேற்கொள்ள உள்ளமை எனது வாழ்விலும் கடினமான காலமாகும் என்றே கூறுவேன்.

நீண்ட கால தீர்வுகள், மற்றும் இடைப்பட்ட காலங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் பற்றி தேடியறிவதால் நல்ல பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் பணம் அவசியம் என்பதால் வருமானம் ஈட்டிக்கொள்ளும் பிரச்சினையே நம்முன் பெரிதாக நிற்கிறது. அதனால் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வழிமுறைகளையும் தேடி அறிய வேண்டும்.

சில காலங்களுக்கு முன்பு உங்களிடத்திலும் உங்களது நிறுவனங்களிடத்திலும் வரி சேகரிப்பது மாத்திரமே அதற்குரிய வழியாக காணப்பட்ட போதிலும், தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளே அதற்குரிய சரியான வழிமுறையாக தெரிகிறது. எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.

வருமானம் ஈட்டுவதற்கான சரியான வழிமுறையொன்று விரைவில் தயாரிக்கப்படும், அதற்கான பணிகளுக்கு திறைசேரியும் தயாராக வேண்டியது அவசியமாகும். நாம் மேம்படுத்த வேண்டிய பல துறைகள் உள்ளன. கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பது அவசியமாகும். எனினும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் குறித்து எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

அதேபோல் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளின் போது கடன் வழங்குநர்களுக்கு நாமும் பங்களிப்புக்களை வழங்க வேண்டியது அவசியமாகும். சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவும் நமது அர்பணிப்புக்கள் அவசியமாகிறது. மறுமுனையில் திறைசேரி அதற்குரிய மாற்று வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறது.

நாம் கடன் மறுசீரமைப்புக்களை செய்ய தவறும் பட்சத்தில் நாம் கடுமையான நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும். எவ்வாறாயினும் மேற்படி செயற்பாட்டிற்கான மாற்று வழிகள் மக்களுக்கு நெருக்கடியாக அமைந்திருக்காது என்ற உறுதியை வழங்குகிறேன்.

அதற்காக இம்மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ள அதேநேரம். மே மாத இறுதிக்குள் பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகளை நிறைவு செய்யவும் எதிர்பார்த்துள்ளோம என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: