பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுகின்றது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, November 12th, 2020

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தை இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலக பொருளாதாரம் எதிர்மறையான திசையில் நகர்வதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியிருந்தது. இந்தியாவின் பொருளாதாரம் 10.4 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. சீனாவின் பொருளாதார வேகமும் 1.9 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் கொரோனா மரணங்கள் 0.3 சதவீதத்தையும் விட குறைவானதாகும்.

கொரோனா வைரஸ் சிகிச்சை சார்ந்த நடவடிக்கைகளுக்கு என அரசாங்கம் 70 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். நாளாந்த பிசிஆர் பரிசோதனைகளுக்கு என 50 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுகிறது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதாகும். அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் 60 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் துறைமுகத்தை விற்பனை செய்து அதற்கான பணம் பெற்றுக்கொள்ளப்பட்டாலும் சீன எக்ஸிம் வங்கிக்கான கடனை தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு செலுத்த நேர்ந்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: