ஊடக நிறுவனங்களுக்கும் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய தகவல்!

Tuesday, April 7th, 2020

கொரோனா வைரஸ் பரவல்நிலை மற்றும் தொற்றுக்கு உள்ளானோர் தொடர்பில் செய்திகளை வெளியிடும் போது அவர்களுடைய அடையாளத்தையும் தனிப்பட்ட தகவல்களையும் வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அரசாங்கத் தகவல் திணைக்களம் அனைத்து ஊடக நிறுவனங்களிடமும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இவ்விடயம் தொடர்பில் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் வேண்டுகோளுக்கு அமைவாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார்.

அக்கடிதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் குறித்த செய்தி அறிக்கையிடலின் போது பின்வரும் விடயங்களைக் கவனத்திற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது:

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் மரணமடையும் பட்சத்தில், அவரது உடலைத் தகனம் செய்ய எடுத்துச்செல்லும் காட்சி, தகனம் செய்யும் இயந்திரத்திற்குள் வைக்கும் காட்சி போன்றவற்றை ஒளிபரப்புவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அச்சந்தர்ப்பத்தில் அங்கு வருகை தந்திருக்கும் குறித்த நபரின் உறவினர்களின் அடையாளங்களை வெளியிடாத வகையிலான காட்சிகளை மாத்திரம் ஒளிபரப்ப வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் தொற்றுக்கு உள்ளான நபர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபரைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த முற்படும் போது அவர், அவரைச் சார்ந்தோருக்கும் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையில் வாக்குவாதம், முரண்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

அத்தகைய சம்பவங்களை செய்திகளாக வெளியிடும் போது இரு தரப்பினரினதும் கௌரவத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாதிருத்தலை உறுதிசெய்ய வேண்டும். அதேவேளை குறித்த நபரைத் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச்செல்லும் போது அந்நபரின் அடையாளங்களை தனிப்பட்ட விபரங்களை வெளியிடக்கூடாது.

இவ்வனைத்து விடயங்கள் தொடர்பிலும் அனைத்து ஊடக நிறுவனங்களும் தத்தமது பிரதேச ஊடகவியலாளர்களுக்கு உரிய தெளிவுபடுத்தல்களை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: