ஓய்வூதியர்களின் நலன்கருதி சகல அஞ்சல் அலுவலகங்களும் சேவையில் – அஞ்சல்மா அதிபர் தெரிவிப்பு!

Friday, May 28th, 2021

நாடு முழுவதும் இன்றும், நாளையும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை சகல அஞ்சல் அலுவலகங்களும், உப அஞ்சல் அலுவலகங்களும் திறக்கப்படுமென்று அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மே மாதத்துக்கான ஓய்வூதியம், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு மற்றும் பொதுசன மாதாந்த கொடுப்பனவுகள் என்பவற்றை வழங்குவதற்காக மாத்திரம் அஞ்சல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், குறித்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனவர்களுக்காக இன்றும், நாளையும் அஞ்சல் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.

குறித்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் தங்களுடைய ஓய்வூதிய அடையாள அட்டை, விவசாயம், மீனவர் ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் மற்றும் பொதுசன கொடுப்பனவுகளுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி அஞ்சல் அலுவலகங்களுக்கு பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிரமங்களால் ஏதேனும் அலுவலகங்கள் திறக்கப்படாவிட்டால், 1950 துரித அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: