பேஸ்புக்கில் அச்சுறுத்தல்விடுத்த நபருக்கு விளக்கமறியல்!
Thursday, December 8th, 2016
ஜனாதிபதி பிரதமர் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு முகப்புத்தகத்தினூடாக அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு முகப்புத்தக மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் 26 வயதான இளைஞரே எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிகே இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார். தினேஷ் சாமர என்ற சந்தேக நபருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரது முகப்புத்தகக் கணக்கில் குரல்பதிவு காணொளியில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரின் சார்பில் ஆயரான சட்டத்தரணி வேறொரு இணையத்தள பக்கத்திலிருந்து பெறப்பட்ட தகவலையே இவர் இவ்வாறு பயன்படுத்தியுள்ளார். இதனால் இவருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதினால் பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இரகசிய பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த விடயங்களை கருத்தில் கொண்ட நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் விசாரணை தொடர்பான விடயங்களை அன்றையதினம் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Related posts:
|
|
|


